வேதாச்சலத்தின் கடையில் இட்லி சாப்பிட்டு முடித்ததும், அருகே இருந்த மரத்தில் சாய்ந்துகொண்டேன். சுருட்டு ஒன்றை எடுத்து பற்றவைத்து ஆனந்தமாக புகையை வெளியேவிட்டேன்.

 ‘‘சாமி… கொஞ்சநேரம் இருங்க, நான் வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன். ரங்கசாமி பங்களா வரைக்கும் போயிட்டு வந்துடுவோம்…’’ என்றார் வேதாசலம்.

நான் காரணம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தலையசைத்து வைத்தபடி கண்களை மூடினேன். ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழைய முயன்ற சமயம் காலடி சப்தம் கேட்டு கண்களைத் திறந்தேன். நாலைந்து இளைஞர்களுடன் வேதாசலம் நின்றார். வந்தவர்கள் வெள்ளை ஜிப்பா, உத்திராட்சம் அணிந்து, மொட்டைத் தலையுடன் இருப்பதைப் பார்த்தவுடன், ஒரு பிரபல சாமியாருடைய சீடர்கள் என்பது தெரிந்தது.

நான் வசதியாக எழுந்து உட்கார்ந்ததும் வேதாச்சலம் தகவல் சொன்னார். அந்த பிரபலமான சாமியார் தன் சீடர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக குற்றாலத்துக்கு வந்திருக்கிறாராம். இங்கே சாதுக்கள் நிறைய பேர் இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்பதால், அவர்களில் சிலருடன் பேச ஆசைப் பட்டிருக்கிறார். சீடர்கள் வேதாச்சலத்திடம் கேட்க, என்னை அழைத்து வருவதாக உறுதி கொடுத்திருக்கிறார்.

வேதாசலத்தை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தேன்.

’’சாமி… உங்களைக் கேட்காமச் சொல்லிட்டேன்…’’ என்று அவர் தயங்க, சிரித்தபடி எழுந்தேன். வேதாச்சலத்தின் தோளின் மீது கை போட்டபடி நடக்கத் தொடங்க, சீடர்கள் பின்தொடர்ந்தனர்.

பிரமாண்டமான பங்களாவுக்குள் நுழைந்ததும், எங்கள் இருவரை மட்டும் தனியே ஓர் அறையில் இருக்கச் செய்தார்கள். கொஞ்சநேரத்தில் ‘குருஜி’ அழைக்கிறார் என்று பக்கத்து அறைக்கு கூட்டிச் சென்றார்கள்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில், நவீன சோபாவில் அமர்ந்திருந்த குருஜி எங்கள் இருவரையும் எழுந்து நின்று வரவேற்று அமரச் சொன்னார். வேதாசலம் கூச்சத்தோடு அமர, நான் எந்த யோசனையும் இன்றி எதிரே இருந்த ஒரு சோபாவில் அமர்ந்து, சுருட்டை வெளியே எடுத்தேன்.

குருஜிக்குப் பின்னே நின்று கொண்டிருந்தவர்கள், உடனே வேகமாக அருகே வந்து, ‘‘எங்கள் குருஜிக்கு புகை அலர்ஜி…’’ என்று இழுத்தார்கள்.

’’அப்படியானால் கொஞ்சநேரம் உங்கள் குருஜியை வெளியே இருக்கச் சொல்லுங்கள், புகை பிடித்ததும் கூப்பிடுகிறேன்…’’ என்று சொல்லிவிட்டு பற்றவைத்தேன்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த குருஜி, ‘‘பரவாயில்லை… புகையுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சீடர்களை கண்களாலே வெளியே அனுப்பினார். கடைசி சீடன் வெளியேற முயன்றபொழுது அவனை மட்டும் கூப்பிட்டு நிறுத்தி, ‘‘இவர்களுக்கு நம் மையத்தில் தயார் செய்யப்பட்ட இயற்கை பானம் கொண்டு வாருங்கள்…’’ என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

எங்களைப் பார்த்து, ‘‘நெருப்பு இல்லாமல் தயாரான இயற்கைப் பானத்தை குடித்துப் பாருங்கள், புதுமையான ருசி இருக்கும்…’’ என்றார்.

’’ஏன் நெருப்பு அத்தனை பாவகரமானதா…?’’ என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டேன்.

’’அப்படியில்லை…’’ என்று கொஞ்சம் தடுமாறியவர், ‘‘இயற்கையாக காய்கறிகளில் கிடைக்கும் சக்திகள் நெருப்பினால் அழிந்துவிடக் கூடும் என்பதால்தான் நெருப்பை கூடியமட்டும் உபயோகிக்க வேண்டாம் என்று எங்கள் மையத்தில் அறிவுறுத்துகிறோம்’’ என்றார்.

நான் எதுவும் பேசாமல் புகைப்பதில் தீவிரம் காட்டினேன். அவரும் அமைதியாக இருக்க வேதாசலம் என்னைக் கைகாட்டிப் பேசினார். ‘‘இவரோட பேருகூட எனக்குத் தெரியாது.  இங்கேயே சுத்திக்கிட்டு இருப்பார், திடீர்னு காணாமப் போயிடுவார். நிறைய படிச்சவர் போல திருமந்திரம், வேதம் எல்லாம் சொல்லுவார். பிச்சைக்காரனைப் போல ரோட்டுல குடிச்சுட்டு விழுந்தும் கிடப்பார். ஆனா எதைப்பத்திக் கேட்டாலும் பதில் சொல்வார். எத்தனையோ பேர் இவர்கிட்ட சீடரா இருக்கேன்னு கேட்டுருக்காங்க, பதிலே சொல்லாம காணாமப் போயிடுவார்..’’ என்று முன்னுரை கொடுத்தார்.

உடனே குருஜி, அவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ‘‘தமிழ்நாட்டுல நிறைய இடங்கள்ல எங்க ஆசிரமம் இருக்குது, மக்கள் எல்லோரும் சந்தோஷமா, நிறைவா வாழணும்கிறதுதான் எங்களோட குறிக்கோள். என்னை எல்லோரும் குருஜின்னு சொன்னாலும், நான் தலைவனா நினைச்சுக்கிறதில்லை, கடவுள் அவதாரமாகவும் சொல்லிக்கிறதில்லை. எல்லா மனிதர்களும் மண், பொன், பொருள், பதவி, பெண் போன்றவற்றில் இருந்து விழிப்பு உணர்வு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்…’’ என்றார்.

’’இதைச் சொல்ல ஆசிரமங்கள் எதுக்கு…?’’

என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாமல், ‘‘உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆர்வமா இருக்கேன், சொல்லுங்களேன்…’’ என்றார்.

’’இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே..’’ என்று பதில் பெறுவதில் குறியாக இருந்தேன்.

’’ஆசிரமம் என்னுடைய விருப்பம் இல்லை. எல்லாமே சீடர்களோட ஆர்வம்தான். அவங்க ஆசையை நிறைவேத்துறதுக்காக ஆசிரமங்கள் கட்டி அங்கிருந்து முடிந்தவரை மக்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வேலைகளை செய்கிறோம். இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு போல இதனை பயன்படுத்துகிறோம்.’’ என்றார்.

’’இதுவரை யாராவது பயன் அடைந்திருக்கிறார்களா?’’ பதில் சொல்ல விருப்பம் இல்லாதவர் போன்று புன்னகையுடன் அமர்ந்திருந்தார். இதுதான் அவரது தப்பிக்கும் டெக்னிக்.  சுருட்டை அணைத்துவிட்டு பேசினேன்.

’’கோயில், ஆசிரமங்கள் எல்லாமே மக்களுக்கு போலியான ஆறுதல் தரலாமே தவிர அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லாது, மெய்ஞானம் தரவும் செய்யாது. புத்தருக்கு போதி மரத்தின் அடியில், மகாவீரருக்கு வெட்டவெளியில், முகமது நபிக்கு மலையில் ஞானம் உண்டானது. ஆசிரமத்தில் எவருக்கும் ஞானம் கிடைத்ததில்லை… எந்த விழிப்பு உணர்வும் உண்டாகாது. அங்கே உங்கள் அடிமைகள் மட்டுமே உருவாவார்கள்…’’ என்றபடி வசதியாக சாய்ந்து உட்கார்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *