ஒற்றுமை இல்லையேல் பணம் இல்லை என்று நான் அவர்களுக்கு புரியவைக்க நினைத்தேன். அதை தெரிந்துகொள்ளும் மனநிலையில் அந்த ஏழைகள் இல்லை.
’’அடச்சீ, பொறம்போக்கு. சுத்த டுபாக்கூர் சாமியா கீறானே…’’ என்றபடி பணம் கிடைக்காத ஏக்கத்தில் சிலர் திட்டிக்கொண்டே கலைந்து சென்றனர். என் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருந்த கூட்டம் ஒன்று கலையாமல் இருந்தது.
ஒரு பெண் முன்னே வந்து, ‘‘ஏஞ்சாமி… இன்னாத்துக்கு எங்களை மட்டும் ஏழையா படைச்சான்? வூடு… வாசல்னு எப்ப நாங்க நிம்மாதியா இருக்கிறது?’’ என்று கேட்டாள்.
’’இப்படி நீ உன்னையே கேள்வி கேட்டுக் கொள்ளாததுதான் காரணம்…’’ என்றேன்.
’’என்னா சாமி… நான் ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு சொல்ற…’’ என்றாள்.
அந்தப் பெண்ணை அருகில் அழைத்தேன்.
’’உங்களது ஏழ்மைக்கு என்ன காரணம் என நீ நினைக்கிறாய்?’’
’’ம்… என்னத்தைச் சொல்றது, எல்லாம் எங்க தலையெழுத்து. எல்லாம் போன ஜென்மத்துல செஞ்ச பாவம்…’’ என்றாள்.
’’அப்படி ஒரு காரணம் இருக்கவே முடியாது பெண்ணே… உன்னிடம் யாராவது இப்போது ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அடுத்த பிறவியில் தருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வாயா? அதுபோன்றுதான் கடந்த பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் கஷ்டப் படுகிறேன் என்று சொல்வது’’ என்றேன்.
அதற்குள் அங்கே இன்னும் சில ஆண்களும் பெண்களும் சேர்ந்துகொண்டார்கள். உட்கார இடமின்றி சுற்றிக் கொண்டார்கள். ஒருத்தி நெளிந்து போன டம்ளரில் காபி கொண்டுவந்து, ‘‘சாமி காபி குடிப்பீங்களா…’’ என்று தயங்கியபடியே கேட்டாள்.
’’உங்களுக்கு நன்றி…’’ என்றபடி காபியை வாங்கிக் குடிக்கத் தொடங்கினேன்.
நான் காபி குடிக்கும் வரை பொறுத்திருந்த ஒரு இளைஞன், ‘‘அப்படின்னா இன்னாத்துக்கு கொஞ்சபேர் பணக்காரங்களாவும், மத்தவங்க ஏழையாவும் இருக்கணும்…’’ என்று கேட்டான்.
’’மனிதனது பிறப்பு என்பது மழைத்துளிகளைப் போன்றது. எந்த இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்திற்கு ஏற்ப அதன் தன்மை மாறுகிறது. இதோ இந்த சாக்கடையில் விழும் மழை சாக்கடையாகிறது, கடலில் விழும் தண்ணீர் உப்புத் தண்ணீராகிறது. குளத்தில் விழும் நீர் குடி நீராகிறது. அதுபோலத்தான் பிறப்பு எந்த குடும்பத்தில் நிகழ்கிறதோ, அந்த தன்மையை பெறுகிறார்கள் அவ்வளவுதான்… முன் ஜென்ம பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதாவது நீ உன் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பாரம்பரிய நோய் மட்டும்தான் அது….’’
’’அதெல்லாம் பேசாத சாமி… ஏழையா கீறவன் பணக்காரனா ஆவ முடியாதா?’’
’’ஏன் முடியாது. ஏழைகள் உடலால் உழைக்கிறார்கள். பணக்காரர்களால் மூளையால் உழைக்கிறார்கள். ஏழைகளும் மூளையால் உழைத்தால் வெற்றி பெற முடியும்..’’
’’அப்படின்னா என்ன அர்த்தம் சாமி… எங்களுக்கு மூளை இல்லீயா..?’’ ஒருவன் கோபமானான்.
’’இல்லை… இன்று பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லாமே ஒரு காலத்தில் ஏழைகளாக இருந்தவர்கள்தான் என்கிறேன். அதனால் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக மாற முடியும்…’’ என்றவன் சிறிது நிறுத்தி, ‘‘இங்கே இருக்கும் உங்களில் வசதியானவர் யார்?’’ என்றேன்.
’’தோ கீதே, ஆஸ்பெஸ்டாஸ் போட்ட வீடு. அதுலகீற சண்முகம் துட்டுக்காரன். வீட்ல டி.வி. கீது… பிரிட்ஜ் கீது. அவன்தான் எங்களுக்கு லோன் தர்றான், வட்டிக்குத்தான்…’’ என்று ஒரு பெண் வேகமாக முன்வந்து சொன்னாள்.
’’உங்களில் ஒருவனாக இருந்தும் அவன் மட்டும் எப்படி ஜெயித்தான்..?’’
பதில் தெரியாமல் விழித்தார்கள்…
‘’அது தண்ணியடிக்காது…’’ என்று ஒருத்தி சொன்னாள்.
’’நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்களில் இருந்த ஒருவர் முன்னேற முடிகிறது என்றால், உங்களால் முடியாதா? அவர் உங்களைப் போன்று எந்தத் திட்டமும் இன்றி நாளெல்லாம் உழைப்பவராக இருக்க மாட்டார். ஆனால் நிச்சயம் உழைப்பார். எல்லோரும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப, திறமைக்கு ஏற்ப மூளையைப் பயன்படுத்துங்கள். நீங்களும் பணம் சேர்க்கலாம், செல்வந்தர்கள் ஆகலாம்…’’ என்றேன்.
அந்த நேரம் முத்துக்கண்ணு, மனைவியுடன் வந்து சேர்ந்தான். ஊசி போட்டு மருந்து கொடுத்தார்களாம். சரியான நேரத்தில் வந்திருக்கிறாய், இல்லையென்றால் உயிருக்கே மோசம் ஆகியிருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்களாம். இன்னும் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் வைத்து அவர்கள் பார்க்கச் சொன்னாலும், பணத்திற்குப் பயந்து உடனே கூப்பிட்டு வந்திருக்கிறான். அவன் இதனை மற்றவர்களிடம் சொல்லியபடி வீட்டிற்குள் ராசம்மாவை படுக்க வைத்தான். எல்லோரது பார்வையும் ராசம்மாள், முத்துக்கண்ணு மீது இருக்க, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்த இடத்தில் இருந்து நழுவினேன்.