ஆவிகள் அட்டகாசம் செய்யும் ஒரு சினிமா பார்ப்பதற்கு திரையரங்கம் போகிறாய். அக்கம்பக்கம் நூற்றுக்கும் மேலான மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திரைக்குப்பின்னே எதுவும் கிடையாது என்பதும், ஒளிக்கற்றை மூலமே பேய் உருவங்கள் தோன்றுகிறது என்பதும் சர்வநிச்சயமாக உனக்குத் தெரியும். ஆனாலும் படம் பார்க்கும்போது உனக்கு பயம் வருகிறது. இதயம் துடிக்கும் சத்தம் உனக்கே கேட்கும் வகையில் திடுக்கிடுகிறாய்.

திரையரங்கினுள் பேய் இல்லை என்று தெரிந்தாலும் நீ பயப்படுவதற்கு காரணம் தெரியுமா? சின்ன வயதில் இருந்து பேய் பற்றி கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளும் மரணம் பற்றிய அச்சமும்தான்.

திரையில் காணப்படும் பேய் உண்மை இல்லை என்றாலும், பேய் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறான் மனிதன். தான் இதுவரை காணாத பேய் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில்தான், பேய்ப்படம் பார்க்கச் செல்கிறான் மனிதன். ஒரு பேய் படத்தை பார்த்துமுடித்ததும், ஏதோ சாதனை புரிந்ததுபோல் சந்தோஷப்படுகிறான். இன்னும் சொல்லப்போனால் மது குடிப்பதில் கிடைக்கும் போதையைப் போன்று பேய் படம் பார்த்து கொஞ்சம் இன்பமும், உள்ளூர கொஞ்சம் பயமும் அடைகிறான். படம் பார்ப்பதால் தன்னுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்பது உறுதியாக தெரிவதால்தான் படம் பார்க்க முன்வருகிறான், அதேநேரம் பயப்படவும் செய்கிறான். இதுபோன்ற பயங்களுக்கான அடிப்படை மரணம் பற்றிய அச்சம் என்பதை விளக்குவதற்காக இந்த உண்மை சம்பவம்.

ஒரு கிராமத்துக்கு வெளியே இருந்த கிணற்றில் விழுந்து அடிக்கடி சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதனால் உள்ளூர்க்காரர்கள் அந்த கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்துவதே இல்லை. ராத்திரி நேரங்களில் அந்த கிணற்றில் ஆவிகள் அழுதுபுலம்பும் சத்தம் கேட்பதாக பேச்சு உண்டு. அதனால் இரவு நேரங்களில் அந்த கிணற்றின் பக்கம் ஊர் மக்கள் யாரும் செல்வது இல்லை. இதனை நம்பாமல் பகலில் அந்த கிணற்றில் குளித்த ஒருவன், சில வாரத்திலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவினான். அதனால் அந்த ஊர் மக்களைப் பொறுத்தவரை அந்தக் கிணறு என்பது பேய்களின் கல்லறை.

இப்படிப்பட்ட நேரத்தில் இரண்டு நண்பர்கள் அந்த கிராமத்துக்கு புடவை வியாபாரம் செய்வதற்கு வந்தார்கள். வரும் வழியில் கிணற்றைப் பார்த்ததும் அவர்களுக்கு குளிக்கும் ஆசை வந்தது. இருவரும் உள்ளே இறங்கி சந்தோஷமாக குளித்துமுடித்து வெளியே வந்தார்கள். கிணற்றை சுற்றி நின்று ஊர் மக்கள் ஆச்சர்யமாக பார்ப்பதைக் கண்டு நண்பர்கள் திகைத்தார்கள், காரணம் கேட்டார்கள். அப்போதுதான் பேய் விவகாரம் அவர்களுக்குத் தெரியவந்தது.

இருவரும் அதிர்ச்சி அடைந்தாலும் ஒருவன் உடனே சுதாரித்துக்கொண்டான். கிணற்றில் பேய் இருக்கிறது என்றால், உள்ளே குளித்ததும் என்னை பிடித்திருக்க வேண்டும், அப்படியெதுவும் நடக்கவில்லை என்று சிரித்தபடி சொன்னான். வேண்டுமென்றால் நான் இந்த ஊரிலேயே சில நாட்கள் தங்குகிறேன், எனக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டு நீங்களும் பேய் இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள் என்று சொன்னான்.

இன்னொரு நண்பனால் பேய் விவகாரத்தை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தேவையில்லாமல் ஆவியின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று பயந்தான். உடனடியாக ஊருக்குத் திரும்பி ஆவியின் கோபத்தில் இருந்து தப்புவதற்காக பரிகாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்பிவிட்டான்.

ஊரில் தங்கியிருந்த நண்பனுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்று ஊர் மக்கள் தினமும் ஆர்வ்த்துடன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அவன் எந்த சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக இருந்தான் ஒரு வாரம் கழிந்த நேரத்தில் ஊருக்கு அந்தத் தகவ்ல் வந்து சேர்ந்தது. ஆம், பேய்க்காக பரிகார பூஜை செய்வதற்காக ஓடிப்போன நண்பன், திடீரென செத்துவிட்டான். ஆம், பரிகார பூஜை முடிந்தபிறகும் யாரோ அவனை அழைப்பதாக சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறான். அதனால் திடுமென தூக்குப்போட்டு செத்துவிட்டான்.

இப்போது ஒருவன் உயிருடன் இருந்தாலும், இன்னொருவன் செத்த காரணத்தால், அந்த பேய் கிணறு மீது மக்களுக்கு முன்னைவிட அதிக பயம் வந்துவிட்டது. அந்த கிணற்றுக்குப் போகும் பாதையை நிரந்தரமாக்வே மூடிவிட்டார்கள். இப்போது உனக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும். பயந்தவனுக்கு மரணம் நிச்சயம்.

1. அப்படியென்றால் எதற்கும் யாருக்காகவும் பயப்படக்கூடாதா? 

பயம் இல்லாத மனிதர்கள் யாருமே இந்த உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு பயம் இருக்கும். பெரும்பாலான மனிதர்களுக்கு இருட்டு, பாம்பு, கரப்பான்பூச்சிகளைக் கண்டால் பயம். இரவு நாய் குலைத்தால் பயந்து நடுங்குபவர்கள் உண்டு. ஏதாவது ஒன்றைக் கண்டு பயம் ஏற்படுவதற்கு காரணம், சம்பந்தபட்ட விஷயம் குறித்த தெளிவு இல்லை என்றுதான் அர்த்தம். இன்னொரு வகையில் சொல்வது என்றால் பயம் ஏற்படுவதற்கு காரணம் மனிதனே.

2. பயம் ஏற்படுவதற்கு மனிதன் எப்படி காரணமாக இருக்கமுடியும்?

சின்ன வயதில் ஆசிரியரைக் கண்டு பயப்படுகிறாய். அவர் அடிப்பார் என்று பயம் கொள்கிறாய். நீ ஒழுங்காக படித்திருந்தால், ஒழுக்கமாக நடந்துகொண்டால் எந்த ஆசிரியருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை.

மேடை ஏறி பேசுவதற்கு பயம் கொள்வாய். அதற்கு பயிற்சி எடுத்திருந்தால் பயம் கொள்ள அவசியம் இல்லை. உயர் அதிகாரியைக் கண்டு பயப்படுகிறாய். மனைவியைக் கண்டு பயப்படுகிறாய். நீ எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் அதிகாரியைக் கண்டும், மனைவியைக் கண்டும் பயப்படத் தேவை இல்லை. அதனால்தான் பெரும்பாலான பயம் ஏற்படுவதற்கு மனிதனே காரணமாக இருக்கிறான்.

3. பயம் தேவையில்லாத ஒன்றா?

அப்படியில்லை, பயம் சில நேரங்களில் மிகவும் அவசியமான உணர்வு. எதற்கு பயப்பட வேண்டும் எந்த நேரத்தில் பயம் தேவையில்லை என்ற தெளிவுதான் அவசியம். ஏனென்றால் உயிரை காப்பாற்ற பயம் தேவை. உயிருக்கு நேரும் ஆபத்தை எச்சரிக்கவும், தப்பிக்கச் செய்யவும் பயம் என்ற உணர்வு பயன்படுகிறது. சமையல் எரிவாயு கசிவதை உணர்நதவுடன் பயம் கொள்வது அவசியம். அப்போதுதான் ஜன்னலைத் திறந்து, கசிவை நிறுத்தி குடும்ப உறுப்பினர்கள் உயிரை காப்பாற்ற முடியும்.

ஏதேனும் ஒரு மிருகத்திடம் சிக்கிக்கொண்டால் உடனே பயம் வரவேண்டும். எப்படி தப்புவது என்று மூளை வேலை செய்யவேண்டும். பயம் கொள்ளும்போது இரண்டு வகையான நிகழ்வுகள் ஏற்படுகிறது. ஒன்று தப்புவது இரண்டாவது எதிர்த்து நிற்பது. இந்த இரண்டு உணர்வுகளும் மனித வாழ்வுக்கு இன்றிமையாதது. தேவையான இடத்தில் தப்பிக்கவும், தேவையான இடத்தில் எதிர்த்து நிற்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

4. பயத்தை எப்படி எதிர்த்து நிற்பது?

மனிதர்களுக்கு விதவிதமான பயம் இருக்கிறது. மருத்துவரீதியில் ஆயிரக்கணக்கான போபியா இருப்பதாக சொல்கிறார்கள். கருப்பு நிறம், கடல், லிஃப்ட், நகரும் படிக்கட்டு, தனிமை, இடி, மழை என்று ஆளாளுக்கு வெவ்வேறு விதமாக பயம் உண்டாகிறது. அனைத்து பயங்களில் இருந்தும் மீண்டுவிட முடியும். ஆம், மனதை திடமும் பலமும் கொண்டதாக மாற்றிக்கொண்டால் பயத்தை பயன் உள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும். பயம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆணிவேர் வரையிலும் சென்று அலசிப்பார். ஒவ்வொரு பயமும் நீயே ஏற்படுத்திக்கொண்டது என்பது புரியவரும். இந்த உண்மை அறிந்துகொண்டால் உன்னைக் கண்டு பயமே பயந்துவிடும்.

5. கடைசியாக ஒரு கேள்வி, பேய் இருக்கிறதா.. இல்லையா?

நம்புபவனுக்கு நிச்சயம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *